அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் எடுக்கக்கூடிய சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க மற்றும் சுகாதாரத் துறைத் தலைவர்களுக்கிடையே நேற்று(18) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் குறித்த விவகாரம் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை, இதயம், கண் மற்றும் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் உட்பட, அரசாங்க வைத்தியசாலைகளில் நீண்ட காலமாகக் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி | Good News For Those Waiting For Surgeries Sl

இந்த நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளால் வழங்கக்கூடிய ஆதரவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரச வைத்தியசாலைகளில் வழக்கமான வேலை நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது.