
சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடும் போது, 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் திட்டமிடப்பட்டுள்ளதென்பதை பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்குமென கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த(susil prem jayantha) தெரிவித்துள்ளார்.
பிடிபன களஞ்சியசாலையில் பாடநூல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர்தர மற்றும் ஏனைய பரீட்சைகளை முன்னதாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் பரீட்சை கால அட்டவணையை புதுப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சாதாரணதரம் , உயர்தரம்,மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அண்மைய க.பொ.த சா/த பரீட்சைக்கு பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட உயர்தர வகுப்புகளுக்கான கற்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.