அரச நிறுவன அறையொன்றில் அரங்கேறிய சம்பவம்; துர்நடத்தையில் ஆசிரியர்
16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ரணால பகுதியில் வசிக்கும் தனியார் நடன வகுப்பொன்றை நடத்திச் செல்லும் நடன ஆசிரியரொருவரே நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபர், கடந்த ஜனவரி மாதம் தனது தனியார் நடன வகுப்பில் கல்வி கற்கும் 16 வயது சிறுமியை நடன நிகழ்வொன்றுக்குத் தேவையான ஆடைகளைப் சரிபார்ப்பதற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பெலவத்தை பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனமொன்றின் அறையொன்றிற்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை கைதான ஆசிரியர் , கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த தலங்கமை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.