ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்ரமசிங்க (Parakrama Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (22.7.2024) முதல் மாகாண கல்வி மற்றும் வலய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், தர வட்டங்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பதினைந்து நாட்களில் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், அனைத்து வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசியல் இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஆசிரியர் - அதிபர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.