யாழில் குடும்ப சண்டையால் பரிதாபமாக பறிபோன இளைஞன் உயிர்
யாழில் உறவினர்களுக்கிடையிலான முரண்பாட்டை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் (Jaffna) - தாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 2 ஆம் திகதி இளைஞனின் தந்தைக்கும், இளைஞனின் அக்காவின் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியுள்ளது.
இதன்போது, இருவருக்கும் இடையிலான மோதலை தடுக்க சென்ற போதே இளைஞன் கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்து மீட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் காவல்துறையினர் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.