
வைத்தியசாலை விடுதியில் நிறைமாத கர்ப்பிணி பரிதாபகரமாக உயிரிழப்பு...அசமந்தப்போக்குடன் வைத்தியசாலை நிர்வாகம்!
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது,வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் இன்றையதினம் (22) விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்ற நிலையில் அங்கு தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாகவும் அதன் பின்னர் அவரது சிசுவை மீட்கும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர், ஆனால் துரதிஷ்டவசமாக வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக தெரிந்துகொள்ளும் பொருட்டு வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.