தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த வேட்பாளருக்கு வந்துள்ள சிக்கல்

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த வேட்பாளருக்கு வந்துள்ள சிக்கல்

புத்தளத்தில் வேட்பாளர் ஒருவரும் அவரது ஆதரவாளர்களும் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சம்பவம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளார்.

வட மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்களா, இல்லையா என தௌிவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை ஆயின் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விளக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வேட்பாளரும் அவரின் ஆதரவாளர்களும் தலைக்கவசம் இன்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கின்றமை தொடர்பான காணொளிகளும் நிழற்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் சனத் நிஷாந்த என்பவருக்பே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.