
ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. கோலி - கம்பீர் செயலை கமெண்ட் செய்த கவாஸ்கர்
விராட் கோலி, கவுதம் கம்பீர் இடையிலான ‘ரைவல்ரி’ குறித்த எதிர்பார்ப்புடன் நேற்றைய ஐபிஎல் போட்டியை காணச் சென்ற ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணி பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருந்த கவுதம் கம்பீருக்கும், பெங்களூரு அணி வீரர் கோலிக்கும் இடையே ஆக்ரோஷமாக வாக்குவாதம் நடந்தது பேசுபொருளானது.
இருவருக்கும் இடையே நீறு பூத்த நெறுப்பு போல புகைச்சல் இருந்து வந்த நிலையில், நேற்று கவுதம் கம்பீர் மெண்டராக இருக்கும் கொல்கத்தா அணிக்கும், விராட் கோலியின் பெங்களூரு அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அதற்கு முன்னதாக, கவுதம் கம்பீர் அளித்த பேட்டியில், பெங்களூரு அணியை எப்போதும் தோற்கடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று பேசியிருந்தார். இதனால், நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி - கம்பீர் இடையிலான சந்திப்பு எப்படி இருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், போட்டியின் போது களத்திற்கு வந்த கவுதம் கம்பீர், விராட் கோலியுடன் கைகுலுக்கினார். அதன்பின் இருவரும் ஆரத்தழுவி நட்பு பாராட்டினர். இந்த காட்சியை மைதானத்தில் பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாமல் சகவீரர்களுக்கும் இது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. இருவரும் நட்புடன் பேசி கொண்டிருந்த போது ரசிகர்கள் மைதானத்தில் ஆரவார கூச்சலிட்டனர்.
Things we love to see 😊
— IndianPremierLeague (@IPL) March 29, 2024
VK 🤝 GG
Follow the Match ▶️https://t.co/CJLmcs7aNa#TATAIPL | #RCBvKKR pic.twitter.com/jAOCLDslsZ
இந்த காட்சிகள் டிவியில் ஒளிபரப்பாகும் போது ஆங்கில வர்ணனையளராக இருந்த ரவி சாஸ்திரி மற்றும் சுனில் காவஸ்கர் கமெண்ட் செய்தனர். அப்போது இந்த காட்சியை பார்த்த ரவி சாஸ்திரி இவர்களின் செயலுக்காக ஃபேர் ப்ளே அவார்டு (Fair Play Award) கொடுக்கலாம் போல என்றார். அதற்கு தனக்கே உண்டான நக்கல் பாணியில் ரிப்ளே கொடுத்த சுனில் காவஸ்கர், ஃபேர் ப்ளே அவார்டு மட்டுமல்ல அவர்களுக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் என்று தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி 83 ரன்கள் உடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்த விளையாடி கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை எட்டியது. கொல்கத்தா அணி தான் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.