வெளிநாடு சென்ற பெண்ணிடம் கட்டுநாயக்காவில் நகை திருடிய அதிகாரி..!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்வதற்காக வருகை தந்த பெண்ணின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் விமான சேவை பாதுகாப்பு பிரிவில் ஸ்கானிங் இயந்திரத்தை பரிசோதனை செய்யும் அதிகாரியான 29 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த அதிகாரி தங்க செயின், பென்டன் ஆகியவற்றை திருடியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிகாரியான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருடிய தங்க செயின் நகைகடை ஒன்றில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பெண்ணிடம் இருந்து திருடிய பென்ரன் மற்றும் இன்னுமொரு பெண்ணின் கைப்பையில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் சிறிய அளவிலான தங்க மோதிரங்கள் என்பனவும் மற்றுமொரு நகை கடையொன்றில் அடகு வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
