ரயில் கட்டணம் உயருகிறது:பருவ சீட்டும் இரத்து..!
ரயில்வே திணைக்களம் அதிகாரம் வழங்கியதன் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் முறை ரத்து செய்யப்படும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், ரயில் கட்டணமும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் அதிகாரம் வழங்கியதன் பின்னர் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஏனைய அனைத்துக் கட்டணங்களையும் தற்போதைய குறைந்தபட்ச புகையிரதக் கட்டணமான 20 ரூபாவில் இருந்து பேருந்து கட்டணத்திற்கு சமமாக அல்லது அதற்கு இணையான வீதத்தால் உயர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சு முன்மொழிந்துள்ளது.

புகையிரத தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலில் அதிகாரிகள் இந்த முன்மொழிவுகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பருவச் சீட்டு முறையை இல்லாதொழிப்பதன் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற முடியும் எனவும், அந்த வருமானத்தில் இருந்து ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியும் எனவும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 19,000 ஊழியர்களைக் கொண்ட ரயில்வே திணைக்களத்திற்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ரயில்வே திணைக்களத்திற்குக் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்பதே இந்த முன்மொழிவுகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றும் முன்மொழிவுடன், முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ரயில்வேயில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.