
தீவிரமடைந்துள்ள மொக்கா சூறாவளி! பல இலட்ச மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
மொக்கா சூறாவளியானது தீவிரமடைந்து பங்களாதேஷ் மற்றும் மியன்மாரின் கரையோர பகுதிகளை தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அங்கு கடும் மழையுடனான வானிலை நிலவுவதுடன் மணித்தியாலத்துக்கு 120 மைல் வேகத்தில் கடும் காற்று வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
20 வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 இலட்சம் பொது மக்கள் பாதுகாப்பான பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஏராளமான வீடுகள் பகுதியளவில் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.
கடும் மழை மற்றும் வெள்ளம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், பாரிய மண்சரிவுகள் இடம்பெறலாம் என பங்களாதேஷ் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூறாவளி, உலகிலேயே அதிக ஏதிலிகளை கொண்டுள்ள முகாமான கொக்சிள பசாரினை தாக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஏதிலிகள் முகாமில் தற்போது 10 இலட்சம் ஏதிலிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலைக்கொண்டுள்ள குறித்த சூறாவளி காரணமாக கரையோர பிரதேசங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் சுமார் 4 மீற்றருக்கும், அதிகமாக உயரத்தில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.