அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல வாரங்கள் ஆகும்!

அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல வாரங்கள் ஆகும்!

அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பல வாரங்கள் ஆகக்கூடும் என்று அவுஸ்ரேலியாவின் செயல் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு இன்று (திங்கட்கிழமை அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். விக்டோரியாவும் அவுஸ்ரேலியாவின் மற்ற பகுதிகளும் ஒற்றை அல்லது இரட்டை இலக்க நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் ஜூன் மாதமாகக் காணப்பட்ட அளவிற்கு தொற்று பரவலை குறைக்க பல வாரங்கள் ஆகும் என அவுஸ்ரேலியாவின் செயல் தலைமை மருத்துவ அதிகாரி பால் கெல்லி கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒரு அளவை அறிமுகப்படுத்துவதற்கும் அதன் விளைவைக் காண்பதற்கும் இடையேயான நேரம் குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். சில சமயங்களில் அதை விட நீண்டது என்பதை நாங்கள் காலப்போக்கில் அறிந்து கொண்டோம்’ என கூறினார். விக்டோரியா மாநில தலைநகர் மெல்பேர்ன் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) 275 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது மூன்று நாட்களுக்கு முன்னர் 438ஆக இருந்தது. முடக்கநிலை மற்றும் முகக்கவசம் அணியும் உத்தரவு இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. அவுஸ்ரேலியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 12,069பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 123பேர் உயிரிழந்துள்ளனர்.