
தென்னாபிரிக்கா சாதனை வெற்றி
தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி, தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜொன்சன் சார்லஸ் அதிகப்பட்சமாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்
259 என்ற வெற்றிலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அணி சார்பில் அதிகபட்சமாக, குயின்டன் டி கொக் 100 ஓட்டங்களையும், ரீஷா ஹென்ரிக் 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதன்மூலம் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியொன்றில் அதிகூடிய வெற்றியிலக்கை அடைந்த அணி என்ற சாதனையை தென்னாபிரிக்கா அணி பெற்றுக் கொண்டது.
முன்னதாக , கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 434 என்ற வெற்றியிலக்கை 49.5 ஓவர்களில் கடந்து தென்னாபிரிக்கா அணி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.