புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை குறித்த அறிவிப்பு

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை குறித்த அறிவிப்பு

2022 ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மாணவர்கள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளமுடியும்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 334,805 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 329,668 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் உதவித்தொகை வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 20,000 ஆகும். இதில் 250 புலமைப்பரிசில்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தனது மதிப்பெண்களை மீள் பரிசீலனை செய்ய விரும்பினால், பிப்ரவரி 28 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் 153 ஆகவும் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 150 புள்ளிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் 148 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு குறைந்தபட்ச வெட்டுப் புள்ளியான 147 புள்ளிகளும், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 145 மதிப்பெண்ணாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இம்முறை பெறுபேறுகள் வெளியாகும் போது மாவட்டம் மற்றும் நாடளாவிய தரவரிசைகள் வெளியிடப்படாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.