ஆசிய கோப்பை - 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி

ஆசிய கோப்பை - 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 5வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேச அணிகள் மோதின.

டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
ஆசிப் உசைன் அதிகபட்சமாக 39 ரன்கள் விளாசினார். மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர்.

இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். நிசாங்கா20 ரன்கள் அடித்தார். கேப்டன் தசுன் ஷனகா 45 ரன்கள் குவித்தார். கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார்.

இலங்கை அணி 19.2 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்.