அமெரிக்காவிலிருந்து வெளியான திடுக்கிடும் தகவல்! சீனாவின் போலி வேசம் அம்பலம்
அண்மையில் இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த சீனா இராணுவ வீரர்களின் உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது தொடர்பில் மர்மம் நீடித்து வந்த நிலையில், அது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் செயல்பாடுகள் தொடர்பில் அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளன.
இந்திய இராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது, சீன இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா மறைத்து வரும் நிலையில், உயிரிழந்த வீரர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனா அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன இராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் ஜூன் 15ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் அடைந்தனர். இதனை இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை.
சீனாவின் சமூக ஊடகங்களில் பலர் இதைக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வெய்போ எனும் சமூகவலைத்தளத்தில் சீன தணிக்கை குறித்த கேள்விகளை எழுப்பினர், அதே நேரத்தில் சீன இராணுவம் அனுபவித்த மொத்த உயிரிழப்புகள் குறித்து வெளிப்படைத்தன்மையை கோரி வருகின்றனர்.
ஆனால், தற்போது வரை சீனா இதுவரை எத்தனை இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் கூட, சீனா மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சில ஊடகங்கள் சீன இராணுவத்துக்கு நேர்ந்த பாதிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளன. அதில் உயிரிழந்த சீன இராணுவ வீரர்களின் உடல்களை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாம் என்று இராணுவ வீரர்கள் குடும்பத்தை சீன அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளன.
இராணுவ மரியாதை எதுவும் இல்லாமல், தொலை தூரத்தில் ஒரு இடத்தில் வைத்து தனித்தனியாக அவர்கள் உடல்களை அடக்கம் செய்யுமாறு அந்த நாட்டு அரசு இராணுவ வீரர்கள் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டிருப்பதாக கூறி(அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுவதாக) சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதை அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை காரணமாக வைத்து உடல்களை அடக்கம் செய்யுமாறு இராணுவ வீரர்கள் குடும்பங்களை சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை உலகத்திற்கு தெரிவித்து விடக்கூடாது என்பதற்காக சீனா இப்படி செய்வதாக கூறப்படுகிறது.
இது இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்றும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்த சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ப்ரீட்பார்ட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.