ஓடிடியில் நுழையும் கமலஹாசன்: விரைவில் படப்பிடிப்பு என தகவல்

ஓடிடியில் நுழையும் கமலஹாசன்: விரைவில் படப்பிடிப்பு என தகவல்

தற்போதைய கொரோனா வைரஸ் காலகட்டத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை என்பதால் பிரபல நடிகர் நடிகைகள் கூட ஓடிடி பிளாட்பாரத்தில் உருவாகும் குறும்படங்கள், வெப்தொடர்கள், திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் ஓடிடி என்ற பெயரை அனைவரும் உச்சரிக்கும் முன்னரே தனது ’விஸ்வரூபம்’ படத்தை டிடிஎச் என்ற ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சி செய்தவர் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது அவர் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த படத்திற்கான திரைக்கதையை கமல்ஹாசன் முற்றிலும் முடித்துவிட்டதாகவும் குறைந்த நடிகை நடிகர்களுடன் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை ஓடிடி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமல் நடிக்கிறாரா? அல்லது இயக்குகிறாரா? அல்லது தயாரிக்கிறாரா? என்பது குறித்த தகவல்கள் இதுவரை இல்லை என்றாலும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே ஷங்கரின் ’இந்தியன் 2’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கமலஹாசன் அதனை அடுத்து ’தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தை தொடங்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது