கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் PCR பரிசோதனைக் கூடம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் PCR பரிசோதனைக் கூடம்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகவுள்ள இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் பிசிஆர் (Rapid PCR) பரிசோதனைக் கூடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

எனவே ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல ஆயத்தமாகும் பயணிகள், தமது விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருகைத்தருமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை கடந்த 5ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் நீக்கியிருந்தது.

எனினும், தமது நாட்டுக்கு தொழிலுக்காக பிறநாடுகளிலிருந்து வருகைத்தரும் பணியாளர்கள் ரெபிட் பிசிஆர் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அண்மையில் திடீர் நிபந்தனையொன்றை விதித்தது.

இந்த ரெபிட் பிசிஆர் வசதிகள் இலங்கையில் இல்லாதிருந்த காரணத்தினால் தொழிலுக்காக புறப்பட்டுச்செல்லவிருந்த இலங்கைப் பணியாளர்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்த விடயம் எமது செய்திகளின் ஊடாக அண்மையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.