தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

நச்சுத்தன்மையுடன் கூடிய தேங்காய் எண்ணெய் சந்தையில் உள்ளதா? என்பதனை அடையாளம் காணப்பதற்காக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் பெறப்பட்ட மாதிரிகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய 'எப்லடொக்ஸின்' என்ற இரசாயன பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தையில் காணப்படுவதாக கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் சமூக விவாதத்திற்கான கரு பொருளாக அமைந்திருந்தது. இதனையடுத்து தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் பரிசோதனைகளுக்காக 125 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டன.

இதன்போது குறித்த மாதிரிகளில் இருந்து இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவ்வாறு பெறப்பட்ட இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய நச்சுத்தன்மையான இரசாயனம் இல்லை என அந்த அதிகார சபை அறிவித்திருந்தது.

எனினும், குறித்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் நச்சுத்தன்மை கொண்ட இரசாயனம் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதனை மறைப்பதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபை முயற்சிப்பதாகவும் தெரிவித்து ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷவினால் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கமைய அந்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆயம், தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.