
பொருளாதார கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு நியமனக் கடிதம்
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட அனூஷ பெல்பிட விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து இன்று (14) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
இணைந்த சேவைகள் உதவி பணிப்பாளர், ஜனாதிபதி உதவி செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் கணக்காளர், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முதலாவது பணிப்பாளர் நாயகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் தலைவர், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனூஷ பெல்பிட அவர்கள் 34 ஆண்டுகால சேவை அனுபவம் கொண்ட சிரேஷ்ட அதிகாரியாவார்.
கடந்த ஜுன் 22ஆம் திகதி அரச துறையில் இருந்து ஓய்வுபெற்ற அனூஷ பெல்பிட அரசியலமைப்பின் பிரிவு 52 (1) இன் அதிகாரங்களின் படி ஜனாதிபதியினால் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.