கரை ஒதுங்கிய சிவப்பு நிற டொல்பின் மீன்!
கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிற டொல்பின் மீன் இனத்தை சேர்ந்த டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
சுமார் 4 முதல் 5 அடி நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று (23) மீனவர்கள் கண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக சம்பவ இடத்திற்கு கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் வருகைத் தந்திருந்தனர்.
இது தவிர ஏற்கனவே அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய நீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் கடலாமைகள், டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் அம்பாறை மாவட்ட கடற்கரை ஓரங்களில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் மேற்கூறிய கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.