ரணிலின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு

ரணிலின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு

கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பான ஆவணங்களை, இன்று (16) முற்பகல் 9.30 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கையளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு, நாடுமுழுதுவம் 249,435 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

எந்தவொரு மாவட்டத்திலும் ஆசனம் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமை கிடைத்தது.

இந்நிலையில், 9 மாதங்களுக்கு மேலாக தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கு நபர் ஒருவர் பெயரிடப்பாடதிருந்த நிலையில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிட, கடந்த மாதம் செயற்குழு தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.