சீரற்ற வானிலையால் நால்வர் உயிரிழப்பு : 170,022 பேர் பாதிப்பு!
சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களில் 41,717 குடும்பங்களைச் சேர்ந்த 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 7 பேர் காணமால் போயுள்ளனர்.
மேலும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 569 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
உயிரிழந்தோர் விபரம்
இரத்தினபுரி, அயகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பர, மெதபொல பிரதேசத்தில் நேற்று வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் செத்மினி லக்மாலி பெரேரா என்ற 16 வயது சிறுமி உயிரிழந்தார்.
அவ்வாறே, அயகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெப்பெட்டிபொல கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ரியூபை பயன்படுத்தி பயணித்த 43 வயதான நபரொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
புத்தளம், மாதம்ப பிரதேசத்தில் மகுணுவடன பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 21 வயது இளைஞர் உயிரிழந்தார்.
இதேவேளை, மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 23 வயதான யுவதியொருவர் இன்று உயிரிழந்தார்.
மழை தொடர்பான எதிர்வுகூறல்
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை, இன்று முதல் படிப்படியாக குறையும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
கொழும்பு, காலி, கேகாலை, மாத்தறை, கண்டி, மாத்தளை, களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு:-
கொழும்பு மாவட்டம் - சீதாவக்க பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
காலி மாவட்டம் - நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
களுத்துறை மாவட்டம் - வலல்லாவிட்ட, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, அகலவத்த மற்றும் மத்துகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
கண்டி மாவட்டம் - தும்பனே, உடுநுவர, யட்டிநுவர பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
கேகாலை மாவட்டம் - கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கன, அரணாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
மாத்தளை மாவட்டம் - அம்பன்கங்க கோரளே, பல்லேபொல மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
மாத்தறை மாவட்டம் - பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
நுவரெலியா மாவட்டம் - அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
இரத்தினபுரி மாவட்டம் - குருவிட்ட, கிரியெல்ல, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் எலபாத்த, அயகம, கலவான மற்றும் எஹெலியகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்