கிழக்கில் கொவிட் தொற்றாளர்களின் பராமரிப்பு தொடர்பில் விசேட அவதானம்
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றுறுதியானவர்களின் பராமரிப்பு தொடர்பில், விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தொற்றுறுதியானவர்கள் 3 விதமாக பிரித்து அவதானிக்கப்படுகின்றனர்.
நோய் அறிகுறிகள் இல்லாது தொற்றுறுதியாகியுள்ளவர்களை முதலாம் பிரிவுக்குள் கணக்கிட்டுள்ளதோடு, அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலைகள் தொடர்பில் தற்போது அவதானிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சிறியளவு நோய் அறிகுறி உள்ளவர்கள் நடுத்தர பிரிவினராக கணக்கிடப்பட்டுள்ளனர்.
அதேநேரம், ஏனையோர் மூன்றாம் வகுப்பினராக கணக்கிடப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலைகளும் தற்போது அவதானிக்கப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.
சிகிச்சையளிப்பதற்கு ஏற்ற வைத்தியசாலைகள் அடையாளம் காணப்பட்ட பின்னர், அவற்றை உடனடியாக கொவிட்-19 சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.