
பாரவூர்தி சாரதியை தாக்கிய காவல்துறை அதிகாரி விளக்கமறியலில் (காணொளி)
மஹரகம - பன்னிப்பிட்டி பிரதேசத்தில் பாரவூர்தி சாரதியை தாக்கிய காவல்துறை அதிகாரி எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் சாரதி அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியதன் பின்னர் தாக்கப்பட்ட சாரதியும், தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரியும் இன்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இதேவேளை, பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து காவல்துறை அதிகாரியால் தாக்குதலுக்கு உள்ளானவர், பண்டாரவளை – பிட்ரத்மலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
மஹரகமை - பன்னிபிட்டிய பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மஹரகம போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் மீது குறித்த இளைஞர் செலுத்திய பாரவூர்தியின் பக்க கண்ணாடி மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.
அதன் பின்னர் அங்கு கூடியிருந்த சிலர் குறித்த இளைஞரை தாக்க முயற்சித்த போது அங்கு கடமையில் இருந்த மற்றுமொரு அதிகாரி அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
குறித்த இளைஞர் பண்டாரவளை பகுதியில் இருந்து கொழும்பிற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அதேநேரம் விபத்திற்குள்ளாகியதில் காயமடைந்த மஹரகமை காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இளைஞரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் தற்போது மஹரகமை காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் இடம்பெறும் போது பதிவு செய்யப்பட்டிருந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
காவற்துறை அதிகாரியின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறுப்பட்ட தரப்பினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பபட்டிருந்தது.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, அரசாங்கம் இந்த விடயத்தில் சொல்லில் அல்லாது செயலில் காண்பித்துள்ளது.
குறித்த காவல்துறை அதிகாரி பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் அனுமதிக்காது என்ற நிலைப்பாட்டிலேயே காவல்துறை மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.