அமெரிக்க அதிபர் பைடனை காப்பாற்றிய கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் பைடனை காப்பாற்றிய கமலா ஹாரிஸ்

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் அதிபர் பைடனின் திட்டத்திற்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாக்களித்ததன்மூலம் அந்த சட்டமூலம் வெற்றி பெற்றதுடன் நாடாளுமன்ற செனட் சபையும் அனுமதி அளித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.‌ அங்கு தொற்று மற்றும் அதனால் நிகழும் உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரியளவில் பாதிப்படைந்துள்ளது.

இதனிடையே தற்போதைய ஜனாதிபதி பைடன் டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார்.

இந்த சூழலில் கடந்த ஜனவரி 20-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நிலையில் அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை உள்ளடக்கிய சுமார் 139 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க மீட்பு திட்டம் என்ற திட்டத்தை அதிபர் ஜோ.பைடன் முன்மொழிந்திருக்கிறார்.

செனட் சபையில் இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியின் 50 உறுப்பினர்களும், எதிராக குடியரசு கட்சிகளின் 50 உறுப்பினர்களும் வாக்களித்தனர். செனட் சபை தலைவரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

அடுத்தகட்டமாக இந்த மசோதா ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் அடுத்த வாரம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு இந்த மசோதா எளிதில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர அதிபர் ஜோ.பைடன் தீவிரம் காட்டி வருகிறார்