யாழில் நட்சத்திர விடுதி அமைத்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழில் நட்சத்திர விடுதி அமைத்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழ் அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க முற்பட்டவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இடத்தில் முற்காலத்து அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உள்ளதென தெரிவித்து தொல்பொருள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமையவே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெரியவருகையில்,

புலம்பெயர் தமிழர் ஒருவர் அரியாலை முள்ளி பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க சட்டத்தரணி ஊடாக தனது அங்கிகாரம் பெற்றுள்ளார். உரிய திணைக்களங்களிடம் இருந்து அனுமதிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்த தொல்பொருள் திணைக்களத்தினர், அங்கு மட்பாண்டங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்து அவை அநுராதபுர காலத்து மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புராதன சொத்துக்களை பராமரிக்க தவறியதாக தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நட்சத்திர விடுதி அமைக்கக் கோரியவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தொல்பொருள் திணைக்களத்தினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனது சட்டத்தரணி ஊடாக நகர்த்தல் பத்திரம் வழங்கி யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று முன்னிலையானார்.

குறிப்பிட்ட இடத்தில் நட்சத்திர விடுதி அமைக்க வழங்கப்பட்ட அரச அனுமதிகள் தொடர்பான ஆவணங்களை எதிரியின் சட்டத்தரணி வீ.கௌதமன் மன்றில் சமர்ப்பித்தார்.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்க முடியாத குற்றச்சாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் அன்றைய தினம் வழக்காளிகளை மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.