அனைத்து இன மக்களின் மனித உரிமைகளையும் பாதுகாப்போம்- பிரதமர் மஹிந்த அறிக்கை

அனைத்து இன மக்களின் மனித உரிமைகளையும் பாதுகாப்போம்- பிரதமர் மஹிந்த அறிக்கை

சுபீட்சமான நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இன மக்களின் மனித உரிமைகளையும் பாதுகாத்து அவர்களின் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளை 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமைக் கொள்கைகளை 1955 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது.

நிலைபேறான அபிவிருத்திக் கொள்கையில் மனித உரிமைக் கொள்கை முன்னுரிமையில் உள்ளதுடன் அதில், ஒற்றுமை, சமத்துவம், கௌரவம், பொறுப்பு மற்றும் சட்டவாட்சி உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்தவாறு அரசாங்கம் செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும். ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளைப் பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம்.

சுபீட்சமான எதிர்காலம் என்ற கொள்கையின் கீழ் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.