நாட்டிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிவர்கள் தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிவர்கள் தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

கடந்த இரு தினங்களில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய அனைவரும் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மேல் மாகாணத்திலிருந்து யாரும் வெளியேறக்கூடாது என இரண்டு தினங்களுக்கு முன்னர் காவல்துறை அறிவித்திருந்தது.

ஆனால், ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக பெருந்தொகையானவர்கள் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியிருக்கின்றார்கள்.

அவ்வாறானவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விஷேட நடவடிக்கை ஒன்றை காவல்துறை நேற்று முடுக்கிவிட்டிருந்தது.

இதன் அடுத்த கட்டமாகவே, வெளியேறிய அனைவரையும் அவர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல்மாகாணத்திலிருந்து ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வெளியேறியவர்களால் நாட்டிற்கு பெரும் ஆபத்து என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித அல்துகே தெரிவித்துள்ளார்.