
மட்டகளப்பில் 11 பேருக்கு கொரோனாத்தொற்று உறுதி - கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்
மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.லதாகரன் தெரிவித்தார்.
இவர்கள் 11பேரும் பேலியகொடை மீன்சந்தைக்கு வியாபாரத்துக்குச் சென்றிருந்தவர்களாவர்.
கடந்தவாரம் பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்றாளிகள் இனங்காணபட்டதை அடுத்து அங்கு வியாபாரத்திற்கு சென்றிருந்த இப் 11பேரும் தனிமைப்படுத்தப்பட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு இன்று சனிக்கிழமை கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியர் எ.லதாகரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பேலிய கொட மீன் சந்தைக்கு சென்றவர்கள் மூலம் திருகோணமலை, பொத்துவில், கல்முனை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் தற்போது 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் ,
குறித்த 11பேருடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் தேவையில்லாமல் வீதிகளில் செல்வதை தவிர்ப்பதுடன், இவர்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் இருப்பின் பொதுமக்கள் பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கவேண்டும்.
இந்த தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.