டொலரின் பெறுமதியில் பதிவாகப்போகும் வீழ்ச்சி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு வரும் வாரங்களில் மேலும் வீழ்ச்சியடையும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து விரைவில் கிடைக்கவுள்ள நிதி மற்றும் அரசாங்கத்தின் முறையான பொருளாதாரத் திட்டம் ஆகிய இரண்டும் உள்நாட்டு நிதிச் சந்தையை மேலும் ஸ்திரப்படுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் அதனை முற்றாக நிராகரித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தேவையற்ற பீதி
டொலரின் மதிப்பு 340 ரூபாயைத் தாண்டியபோது சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அதனைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டாடியதாக அவர் குற்றம் சாட்டினார். எனினும், தற்போதைய நிலவரப்படி டொலரின் மதிப்பு மீண்டும் குறைவடைந்து, சுமார் 334 ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாகவும் இந்த நிதி கிடைத்தவுடன் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு மேலும் பலமடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறிய அவர், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் எவ்வித தொய்வுமின்றி வெற்றிகரமாகத் தொடர்வதாக உறுதியளித்துள்ளார்.