
23 வயதில் இருந்து நகைச்சுவை உணர்வு, சிரிப்பதை இழக்கிறோம்- ஆய்வில் தகவல்
மனித வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு, சிரிப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்மூலம் மன இறுக்கத்தில் இருந்து விடு பட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதுபோன்ற மனநிலை எப்போதும் இருப்பதில்லை. ஒருவித பதற்றத்துடனேயே வாழ்க்கை செல்வதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நகைச்சுவை உணர்வு, சிரிப்பு ஆகியவற்றை நாம் இழப்பது தான் காரணம்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 23 வயதில் இருந்து நகைச்சுவை உணர்வு- சிரிப்பதை இழக்கிறோம் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வணிக பள்ளி கல்வியாளர்கள் ஜெனிபர் ஆகர், நவோமி பாக் டோனஸ் ஆய்வை நடத்தினர். அதில் கூறியிருப்பதாவது:-
மக்கள் 23 வயதை எட்டும் போது ஒவ்வொரு நாளும் சிரிக்கும் நேரம் வீழ்ச்சி அடைய தொடங்குகிறது. 166 நாடுகளில் 1.4 மில்லியன் மக்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிரித்தார்கள் என்பதை அளவிட்டனர்.
இதில் 23 வயதில் இருந்து சிரிப்பது குறையத் தொடங்கி உள்ளது. இதற்கு அப்போதில் இருந்து வேலை உலகில் நுழைவது தான் காரணம். நாம் வளர்ந்து பணியாளர்களாக வேலை உலகில் நுழையும் போது தீவிரமான மற்றும் முக்கியமான நபர்களாக மாறி விடுகிறோம்.
அங்கு சிரிப்பை வர்த்தகத்துக்காகவும், வேலைக்காகவும் பயன்படுத்துகிறோம். உழைக்கும் உலகில் நகைச்சுவை உணர்வு குறைவான திறன்கொண்டதாக இருக்கும். ஆனால் அதை சரியாக பயன்படுத்தும்போது ஒரு நிறுவனம் வல்லரசாக மாறக்கூடும்.
சராசரியாக 4 வயது குழந்தை ஒரு நாளுக்கு 300 முறை சிரிக்கிறது. அதே நேரத்தில் சராசரியாக 40 வயது உடையவர் 10 வாரங்களில் 300 முறை சிரிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.