நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக நாட்டில் நேற்றைய தினம் 74 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்தநிலையில் மினுவாங்கொடை கொத்தணியில் 68 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 22 பேருக்கும், அவர்களுடன் தொடர்பினை பேணிய 46 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 789 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தபட்டிருந்த கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த மூவருக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 23 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான ஆயிரத்து 826 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே கொவிட்-19 தொற்றுறதியாவதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இலங்கையில் சமூக தொற்றாக மாறவில்லை என்பது விஞ்ஞான ரீதியாக உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளை 24 மணி நேரத்திற்குள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்