வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

இன்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மழையுடனான காலநிலை காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒரு சில இடங்களில் இன்று மாலை வேளையிலோ அல்லது இரவு வேளையிலோ மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும்இன்று இரவிலிருந்து அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.