
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையம் முடக்கப்படுமா...?
தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தை மூடுவதற்கு இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என விமான சேவைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள மூன்று ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மூன்று தொழிற்சாலைகள் மாத்திரம் கிருமி நீக்கத்திற்காக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணி பரவலுடன், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் 3 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இந்த நிலையில், இன்றைய தினமும் அங்குள்ள தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறதியாகிள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் கொரோனா கொத்தணி, தற்போது முழுமையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் லால் பணாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்க முடிந்துள்ளதாகவும், தற்போது வரையில் ஆயிரத்து 100 பேர் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், குறித்த தொழிற்சாலையை சேர்ந்த ஏனைய அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கொக்கலையில் உள்ள ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையிலும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த கொத்தணி மாத்திரமன்றி, நாட்டின் வேறு சில பகுதிகளிலும் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, அது தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் லால் பணாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட்-19 பரவல் காரணமாக மோட்டார் வாகன போக்குரத்து திணைக்களத்தின் நாரஹேண்பிட்டி, வேரஹேர காரியாலயங்கள், அடுத்த வாரம் பொதுமக்கள் சேவைக்காக திறக்கப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.