
மனச்சாட்சிக்கு உட்பட்டு தீர்மானிப்பேன்! 20ஆவது திருத்தம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தகவல்
முன்வைக்கப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்கள் சிறந்தவை, சில கெடுதியானவை என்று ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அவர்,
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக தான் மனசாட்சிக்கு அமையே தீர்மானிப்பேன். 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் 18வது திருத்தச் சட்டத்தை நோக்கி செல்வதாக இருந்தால், அது நடக்க வேண்டிய விடயமல்ல.
முன்வைக்கப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்கள் சிறந்தவை, சில கெடுதியானவை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர், வாக்கெடுப்பு நடத்தும் போது தீர்மானம் ஒன்றை எடுப்பேன்.
குடும்பத்தினர் மற்றும் ஏனையோரின் தேவைக்கு அமைய நான் தீர்மானங்களை எடுக்க மாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய தீர்மானங்களை எடுப்பேன்.
நாட்டு மக்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கோரினார்களே அன்றி, ஒட்டுப் போடும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை அல்ல. தொடர்ந்தும் இதற்கு இடமளிக்க முடியாது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக கூறியே நாங்கள் வாக்கு சேகரித்தோம் எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.