மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 30 பேருக்கு கொரோனா
நாட்டில் நேற்றைய தினம் 35 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியாகியுள்ளது.
மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 30 பேருக்கு தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேரும், அந்த தொழிற்சாலையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்து மேலும் 24 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.
அத்துடன், வேறு தொடர்புடைய 3 பேருக்கும் தொற்றுறுதியான நிலையில், அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் முன்னதாக ஆயிரத்து 53 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகி இருந்தது.
இந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 5 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.
இந்திய கடற்படையினர் 2 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 2 பேரும், குவைத்தில் இருந்து வந்த ஒருவரும் இந்த எண்ணிக்கையில் உள்ளடங்குகின்றனர்.
இதற்கமைய, இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக உயர்வடைந்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பினர்.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு நகரில் தோராயமான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நபர்களுக்கு தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட்-19 பரவல் காரணமாக குவைத்தில் உள்ள இலங்கை தூதுரகம் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை தங்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குவைத் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் தூதரக காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.
இந்த நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்கும் நோக்கில் எதிர்வரும் 18 ம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டிருப்பதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் அவசர தேவைகளின் போது மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.