
நியூயோர்க்கில் திடீரென தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடிக் கட்டடம்! ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படை
நியூயோர்க்கின் குயின்ஸில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடமொன்று தீப் பிடித்து எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர் என அமெரிக்க ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் தீப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 35இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 8 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தில் காயமடைந்தவர்களில் 16 தீயணைப்பு வீரர்களும், ஐந்து பொதுமக்களும் உள்ளடங்குவதாகவும், எனினும் அதில் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் நியூயோர்க் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த கட்டடத்தில் சுமார் 150 குடியிருப்புகள் உள்ளதுடன், விபத்தினையடுத்து 90 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டடத்தின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஆரம்பத்தில் ஏற்பட்டுள்ளதுடன், அது ஏனைய குடியிருப்புகளுக்கும் விரைவாக பரவியுள்ளது. எனினும் தீ விபத்துக்கான காரணம் கூறப்படவில்லை.