பாகிஸ்தான் வீரர் ஹபீஸ்க்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதி: ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

பாகிஸ்தான் வீரர் ஹபீஸ்க்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதி: ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.

பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது. இங்கிலாந்து செல்ல இருக்கும் 29 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 12 பயிற்சியாளர் குழுவினரிடம் அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹர் ஜமான், ஆல்ரவுண்டர் ஷதாப் கான், புதுமுக பேட்ஸ்மேன் ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய சோதனையில் குளறுபடியா? என்ற சந்தேகம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஹபீசுக்கு கொரொனா இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தனிமையில் இருக்காத அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பாகிஸ்தான் அணி நாளை இங்கிலாந்துக்கு பயணமாகிறது. நோய் தொற்று உள்ளவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற மாட்டார்கள்.