இந்தியாவில் புதிதாக 70,589 பேருக்கு கொரோனா - குணமடைந்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்து நிற்கின்றன.

 

தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 70 ஆயிரத்து 589 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 

 

இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்து 45 ஆயிரத்து 292 ஆக உயர்ந்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 776 ஆகும். இதன்மூலம் மொத்த பலி  எண்ணிக்கையும் 96,318 ஆக அதிகரித்து இருக்கிறது.

 

தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 47 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 51 லட்சத்து 01 ஆயிரத்து 398 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.