நேருக்கு நேர் மோதிய பஸ்கள்: பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை
இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11பேர் காயமடைந்த நிலையில் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ்ஸும் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் 11 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.