கொரோனா அச்சம் – ஜப்பானிலிருந்து 292 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சம் – ஜப்பானிலிருந்து 292 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஜப்பானில் சிக்கித் தவித்த 292 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி ஜப்பானின் நரிட்டாவிலிருந்து 292 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை 3.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேநேரம் 64 இலங்கை மற்றும் வெளிநாட்டு மாலுமிகள் இன்று அதிகாலை 5.35 மணிக்கு கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.