மாணவர்களிடையே அடிதடி - கலவர பூமியான நிகழ்விடம்! ஒருவர் வைத்தியசாலையில்.....
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க.பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வின் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரிய வருகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 2600 வரையான மாணவர்கள் கூட்டுறவாளர் மண்டபத்திற்கு செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மண்டபத்திற்குள் சுமார் 1200 மாணவர்கள் மாத்திரமே அமர்ந்திருக்க முடியும். இடப்பற்றாக்குறை காரணமாக ஆரம்பத்திலேயே மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட தொடங்கியது.
ஒரு கட்டத்தில் மாணவர்கள் சிலர் அடிதடியில் ஈடுப்பட்டனர். கதிரைகளாலும் பரஸ்பரம் தாக்கிகொண்டனர்.
பின்மண்டப வளாகத்திலிருந்து வௌியேறிய மாணவர்கள் வீதியிலும் மோதிக்கொண்டனர்.
கையில் பொல்லுகளுடன் சில மாணவர்கள் அடிதடியில் ஈடுப்பட்டனர். இதன் போது அடிதடியில் ஈடுப்பட்ட மாணவன் ஒருவரின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20 இற்கும் மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.