தள்ளாடிப்பகுதியில் முறியடிக்கப்பட்ட பாரிய கடத்தல்!
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைவாக , பாரிய சட்ட விரோத கடத்தல் நடவடிக்கை ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சியின் பணிப்பின் பெயரில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையிலான,மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாரிய அளவிலான சட்ட விரோத சாராய கடத்தல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து முருங்கன் ஊடாக மன்னார் சவுத் பாருக்கு பார ஊர்தி ஒன்றில் பீர் பாட்டில்கள் மத்தியில் சூட்சுமமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட 750 மில்லி லீட்டர் அளவை உடைய 660 சாராய போத்தல்களே மன்னார் தள்ளாடி பகுதியில் வைத்து மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே நேரத் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பெயரில் அனுராதபுரத்தை சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடைய வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாரவூர்தி மற்றும் மது போத்தல்கள் பொலிஸாரின் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.