கடைக்குள்ளேயே உரிமையாளர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக்கொலை
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் மிரிஜ்ஜவில, 100 அடி வீதி பகுதியில் "லீலா ஸ்டோர்ஸ்" என்ற கடையை நடத்தி வந்த 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.
இன்று (11) காலை 06 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து, பலத்த காயமடைந்திருந்த பெண்ணை உடனடியாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில், குறிப்பிட்ட கடையின் பின்புற பகுதியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு, கடைக்குள் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவர் உடனடியாக அது குறித்துப் பார்ப்பதற்காகக் கடைக்குள் வந்து சோதித்தபோது, நபர் ஒருவர் கடைக்குள் இருந்து உடனடியாக வெளியேறி தப்பியோடுவதைக் கண்டுள்ளார்.
இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், முதற்கட்ட மரண விசாரணை அதிகாரியின் பரிசோதனை நடவடிக்கைகளுக்கான தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.