
ஐந்தாண்டு திட்டத்தை தயாரிக்குமாறு இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு
ஆண்டுதோறும் செய்யக்கூடிய பணிகளின் அளவை மதிப்பீடு செய்து ஐந்தாண்டு திட்டத்தை தயாரிக்குமாறு இராஜாங்க அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.
இராஜாங்க அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள், ஒரு திட்டத்தின் படி மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அனைத்து திட்டமும் மேற்கொள்ளப்பட்டன என அதிகாரிகள் கூறினாலும் வகுக்கப்பட்ட உத்திகள் மற்றும் திட்டங்கள் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டிருந்தால் அவை பயனற்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் எந்தவொரு திட்டத்தையும் எளிமையான படி மூலம் ஆரம்பித்து பின்னர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது எமது கடமை என்றும் அதிகாரிகளின் உதவியுடன் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.
அத்தோடு வாக்குறுதியளித்தபடி, நாட்டின் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதாகவும் அந்த பொறுப்புக்கு தான் கட்டுப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த வாய்ப்பை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.
இதேவேளை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதே 20 ஆவது சீர்திருத்தத்தின் நோக்கமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதன்மையான நோக்கம் 19 ஆவது சீர்திருத்தத்தின் சில விடயங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகும் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பிரேமலால் ஜயசேக்கரவின் விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கரு ஜயசூரிய, தலதா அத்துகோரள, சஜித் பிரேமதாச ஆகியோர் அங்கம் வகிக்கும் அரசியலமைப்பு பேரவையே தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் மேன் முறையீட்டு நீதிபதியையும் நியமித்தது என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி எதிர்க்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டு பற்றி அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாமோ அல்லது பிரதமரோ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித தலையீட்டையும் செய்யவில்லையென்று குறிப்பிட்டார்.