அம்பாறை கடல் கரையோரங்களில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ள நாரா!

அம்பாறை கடல் கரையோரங்களில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ள நாரா!

அம்பாறை கடற் கரையோரங்களில் ஆய்வுப் பணிகளை ‘நாரா’ நிறுவனம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் என இரு தினங்களாக பெரிய நீலாவணை முதல் ஒலுவில் வரையான கடல் நீர் பகுப்பாய்வு, மீனவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் பிடிக்கப்படும் மீன்னிடங்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆராயப்பட்டன.

கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அண்மித்த கடற் பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் பகுதி பகுதியாக வருகை தந்திருந்த நாரா நிறுவன அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது.

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் தனியார் விடுதியில் தங்கிருக்கும் இக்குழுவினரின் ஒரு பகுதியினர் கப்பல் அமைந்துள்ள பகுதியிலுள்ள கடல் நீர் மாதிரியை பெற்று அதனை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சில இடங்களில்  பிடிக்கப்பட்ட மீன்களும் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாரா (NARA) நிறுவனம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

எனினும் இந்த  கப்பல் தீ விபத்தின்  மூலம் நச்சுப்பொருள் வெளியேற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் தெரியவரவில்லை என  நாரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்  குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த நிலைமை தொடர்பில் அம்பாறை மாவட்டத்தின்  ஏனைய கடற்பிராந்தியங்களிலும் இன்று ஆய்வுகள் மேற்கொள்ளபடவுள்ளன.

இதன்படி பாணம, திருக்கோவில் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளிலும் இவ்வாறான ஆய்வுகளை நாரா நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND  கப்பலினால்  சமுத்தரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஏற்கனவே  சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையும் கடலாராய்ச்சில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை ( நாரா) நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.