காலியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 18 பேர் காயம்
காலி-தடல்ல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து பொலனறுவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், அம்பலாங்கொடையில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த தனியார் பேருந்து முன்னால் பயணித்த மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முற்படுகையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி காயமடைந்துள்ளதோடு, இவரது கால்கள் கடும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஏனைய அனைவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.