நாடாளுமன்ற தேர்தலின் போது தமக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் காணப்பட்டது- மனோ கணேசன்

நாடாளுமன்ற தேர்தலின் போது தமக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் காணப்பட்டது- மனோ கணேசன்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் காணப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் தேசிய பிரச்சினை ஒன்று உள்ளது. இதன் காரணமாகவே நாட்டில் யுத்தம் ஏற்பட்டது.

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தமோ அல்லது இனங்களுக்கு இடையிலான பேதமோ அவசியமில்லை.

அனவரும் இலங்கையர் என்ற வகையில் செயற்படுவதற்கான காலம் ஏற்பட்டுள்ளது.

சிங்கள மக்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்வதன் ஊடாகவே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

இதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேவேளை, ஏனைய சமூகத்தினர் போன்று மலையக பெருந்தோட்ட மக்களும் லயன் வாழ்க்கை முறையில் இருந்து, தனி வீட்டுத்திட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் இதன்போது வலியுறுத்தினார்.

இதேவேளை, நுவரெலிய மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் முன்னெடுத்து சேவையின் அடிப்படையிலேயே, தாங்கள் நாடாளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டணியின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.