மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் தீ பரவல்!

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் தீ பரவல்!

கொத்மலை – வேவன்டனில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் வீட்டின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த  தீ அனர்த்தம் காரணமாக, வேவன்டன் இல்லத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பல உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும், தீ பரவலுக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.